தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான Lily Thai என்ற பெண், நோய்நிலைமையொன்றின் காரணமாக தனது வாழ்நாளின் பல வருடங்களை வலியுடன் கழித்திருந்த பின்னணியில், துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் அதாவது கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்தி கடந்த புதன்கிழமை உயிர்துறந்தார்.
இப்பெண் தொடர்பான செய்தியை Adelaide Advertiser வெளியிட்டிருந்தது.
இனிமேலும் வலியைப் பொறுக்கமுடியாது என்பதால் தெற்கு ஆஸ்திரேலியாவின் கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்த திட்டமிட்டதாகவும், நோயினால் தான் அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அந்த இளம் பெண் தெரிவித்திருந்தார்.
தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று தனக்குத் தெரியும் என்றபோதிலும், எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இதுவெனவும், தான் அமைதியாக இறக்க வேண்டும் என்பதே தனது தெரிவு எனவும் அவர் கூறினார்.
Ehlers-Danlos Syndrome, Autoimmune autonomic ganglionopathy போன்ற குணப்படுத்த முடியாத நோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்டிருந்த Lily Thai, நடப்பது சாப்பிடுவது உட்பட எந்தவொரு செயலையும் தானாகச் செய்ய முடியாதநிலையில், மற்றவர்களை நம்பியே வாழ வேண்டியிருந்ததாகவும், 17 வயதிலிருந்து கடந்த 6 வருடங்களாக அதிகளவான நாட்களை மருத்துவமனையிலேயே கழித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தப்பின்னணியில் தெற்கு ஆஸ்திரேலியாவில் கருணைக்கொலை செய்துகொள்வதை அனுமதிக்கும் சட்டம் இவ்வாண்டு ஆரம்பத்தில் நடைமுறைக்கு வந்திருந்தநிலையில் அதைப் பயன்படுத்தி தனது வாழ்வை முடித்துக்கொள்ள Lily Thai தீர்மானித்திருந்தார்.
இதனடிப்படையில் கடந்த புதன்கிழமை அவரது வாழ்வை முடித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இறுதிநாளன்று Lily Thai-ஐ கடற்கரைக்கு அழைத்துச்செல்ல அவரது தோழி விரும்பியபோதிலும் Thai-இன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.
இதையடுத்து Lily Thai-இன் நண்பர்களும் குடும்பத்தினரும் அவரது படுக்கைக்கு அருகில்வைத்து அவருக்கு இறுதி பிரயாவிடை வழங்கினர்.
Lily Thai-இன் இறுதிச் சடங்கு வியாழன் காலை Centennial Park மயானத்தில் நடைபெற்றது.
கருணைக்கொலை சட்டத்தின்கீழ் குணப்படுத்த முடியாத நோய் காரணமாக சகிக்கமுடியாத வலி மற்றும் உபாதையால் துன்பப்படும் ஒருவர் தனது உயிரைப்போக்கிக்கொள்ள பல்வேறு நிபந்தனைகளின்கீழ் உதவியளிக்கப்படுகிறது.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் ஆஸ்திரேலிய மாநிலமாக விக்டோரியா காணப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, டாஸ்மேனியா, தெற்கு ஆஸ்திரேலியா என தற்போது அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Readers seeking support and information about suicide can contact 24 hours a day online and on 13 11 14. Other services include the on 1300 659 467, and (for people aged five to 25) on 1800 55 1800.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.