விக்டோரியாவில் Nursing படிப்பை இனி இலவசமாக படிக்கலாம்!

விக்டோரியா மாநிலத்தில் சுகாதாரத்துறையில் செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க 10,000 க்கும் மேற்பட்ட செவிலியர் மற்றும் மகப்பேறுத் தாதி பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான முழுமையான கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Victorian Premier Daniel Andrews

Victorian Premier Daniel Andrews said his government had been working on the package for months. Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்டோரிய மாநில அரசால் அறிவிக்கப்பட்ட இந்த $270 மில்லியன் திட்டத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மற்றும் மகப்பேறுத் தாதி மாணவர்கள் இலவசமாக பயிற்றுவிக்கப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

இந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தொழில்முறை-ஆரம்பகட்ட செவிலியர் மற்றும் மகப்பேறுத் தாதி படிப்பில் சேரும் அனைத்து புதிய உள்நாட்டு மாணவர்களும் பாடச் செலவுகளை ஈடுகட்ட $16,500 வரை உதவித்தொகையைப் பெறுவார்கள்.

மாணவர்கள் தங்களின் மூன்று வருட படிப்பில் $9000 உதவித்தொகை பெறுவார்கள், மீதமுள்ள $7500 அவர்கள் விக்டோரியா மாநில பொது சுகாதார சேவைகளில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மாநில அரசால் செலுத்தப்படும்.

அவர்களின் முழு HECS கடனையும் நாங்கள் செலுத்துவோம் - Daniel Andrews

"அவர்களின் முழு HECS கடனையும் நாங்கள் செலுத்துவோம்" என்று மெல்பனில் உள்ள Australian Nursing and Midwifery Federation (ANMF) அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பிரீமியர் Daniel Andrews கூறினார்.

அதுமட்டுமன்றி தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தை மருத்துவம் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு உள்ளிட்ட சிறப்புப் பகுதிகளில் படிப்பை முடிக்க, ஆயிரக்கணக்கான முதுகலை செவிலியர்களுக்கு சராசரியாக $10,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பிற அம்சங்கள் பின்வருமாறு:

  • செவிலியர் கற்கைநெறியில் பதிவுசெய்த மாணவர்கள் கல்விக்கற்று பதிவு செய்யப்பட்ட செவிலியர்களாக ஆக அவர்களின் படிப்பு செலவிற்கு $11,000 புலமைப்பரிசு
  • 100 புதிய பயிற்சி செவிலியர்களுக்கு $12,000 புலமைப்பரிசு
  • புதிய பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளை மருத்துவமனைகளில் பணியமர்த்த உதவும் வகையில் $20 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
Australian Nursing and Midwifery Federation-இன் மாநில செயலாளர் Lisa Fitzpatrick, விக்டோரிய மாநில அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 26ஆம் தேதி விக்டோரிய மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சுகாதாரம் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

மாநிலத்தில் ஆளும் லேபர் அரசின் பல பில்லியன் டாலர் புறநகர் ரயில் திட்டத்தை நிறுத்தி விட்டு அந்த நிதியை மெல்பன் மற்றும் பிராந்திய விக்டோரியாவில் மருத்துவமனைகளை கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கூறியுள்ளது.


—————————————————————————————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 30 August 2022 9:03am
By Selvi
Source: AAP


Share this with family and friends