முக்கிய விடயங்கள்
- அதிகாலையில் ஏற்பட்ட 7.8 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மதியம் 7.7 அளவில் மற்றொரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பாதிப்பை மதிப்பிடுவதற்கும் நிவர்த்தி செய்வதற்குமான முயற்சிகளை, மோசமான இணைய தொடர்புகள் மற்றும் சேதமடைந்த சாலைகள் தடுக்கின்றன.
- துருக்கியில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட நிலநடுக்கங்களில், அதிகமானவர்கள் உயிரிழந்தது தற்போதைய நிலநடுக்கத்தால்.
துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் திங்களன்று ஒரு பெரிய நிலநடுக்கம் 3,700ற்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளது. உறைபனியுடன் கூடிய குளிர் கால வானிலை காயமடைந்த மற்றும் வீடற்ற ஆயிரக்கணக்கானவர்களின் அவலத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கிறது.
7.8 அளவிலான நிலநடுக்கம் துருக்கிய நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் பலவற்றையும் இடித்து வீழ்த்தியுள்ளது. அத்துடன், பல ஆண்டுகளாக போரினால் இடம்பெயர்ந்த மில்லியன் கணக்கான சிரியர்களுக்கு மேலும் பேரழிவைக் குவித்துள்ளது.
கடுமையான குளிர் கால காலநிலையில், அதிகாலையில் சூரியன் உதிக்க முன்னர் நிகழ்ந்த நிலடுக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகலில் மற்றொரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
'உலகம் அழிந்தது போல'
“எங்கள் வீட்டில் ஒன்பது பேர் இருந்தோம், நிலநடுக்கம் ஏற்படும் போது தொட்டிலில் ஆட்டப்படுவது போல் அசைந்தோம், எனது இரண்டு மகன்கள் இன்னும் இடிபாடுகளில் மாட்டியுள்ளனர். நான் அவர்களுக்காக காத்திருக்கிறேன்” என்று தென்கிழக்கு துருக்கியில் உள்ள Diyarbakir என்ற இடத்தில் தான் வாழ்ந்த ஏழு மாடித் தொகுதியின் இடிபாடுகளுக்கு அருகிலிருந்து ஒரு பெண் கூறினார்.
அவளது கை முறிந்துள்ளது. முகத்தில் காயங்கள் இருக்கின்றன.
“உலகமே அழிந்து விட்டது போல் இருந்தது” என்று, சிரியாவின் வடக்கிலுள்ள Atareb நகரில் வாழும் Abdul Salam al-Mahmoud கூறினார். “கடுமையான குளிர் மட்டுமின்றி கனமழை பெய்கிறது. மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்று அவர் வேண்டினார்.
தெற்கு அட்லாண்டிக்கில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க புவியியல் ஆய்வு உலகளவில் பதிவு செய்த மிகப்பெரிய நிலநடுக்கத்தை விட இங்கு நடந்த நிலநடுக்கம் மிகப் பெரியதாகும்.
துருக்கியில், இறந்தவர்கள் எண்ணிக்கை 2,316 ஆக இருந்தது என்று அந்நாட்டு பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் (AFAD) கூறியது. இஸ்தான்புல் அருகே கிழக்கு Marmara கடல் பகுதியை அண்டிய இடங்களில், 1999 ஆம் ஆண்டில் இதேபோன்ற அளவிலான நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி, 17,000ற்கும் அதிகமானவர்களின் உயிர்களைக் காவு கொண்டது.
சிரியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 1,444 பேர் கொல்லப்பட்டனர் என்றும் சுமார் 3,500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சிரிய அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படும் வடமேற்கு பிராந்தியத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளாவர்களது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

A 17-year-old girl being rescued from under the rubble of a collapsed building in Elbistan district in southern Turkey's Kahramanmaraş Province. Source: Getty / Anadolu Agency
சில பகுதிகளில், இரவு நேரத்தில் வெப்பநிலை உறைபனி அளாவிற்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இடிபாடுகளில் சிக்கிய அல்லது வீடற்ற நிலையில் இருக்கும் மக்களின் நிலைமை மோசமடைகிறது. வார இறுதியில் அங்கு பனிப்புயல் வீசியதைத் தொடர்ந்து திங்களன்று மழை பெய்தது.
நிலநடுக்கத்தால் துருக்கியில் 13,000ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
துருக்கிய நகரமான Iskenderun அரசு மருத்துவமனை இப்போது வெறும் கற்குவியலாக மாறியுள்ளது. இருந்தாலும் காயமடைந்தவர்களைப் பராமரிக்க சுகாதார ஊழியர்கள் தங்களால் முடிந்ததைச் செய்து வருகின்றனர்.
“ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை தேவை என்று அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று 30 வயதான Tulin என்ற பெண், மருத்துவமனைக்கு வெளியே நின்று கண்ணீரைத் துடைத்த வண்ணம் பிரார்த்தனை செய்கிறார்.
துருக்கியில் மே மாதம் நடக்கும் தேர்தலில் கடுமையான போட்டியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார் அந்நாட்டு அதிபர் Tayyip Erdogan. இந்த நிலநடுக்கம், ஒரு வரலாற்றுப் பேரழிவு என்றும் 1939 க்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் என்றும் அதிபர் Tayyip Erdogan கூறினார். துருக்கிய அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
“ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தையும் தங்கள் ஆன்மாவையும் கொடுத்து மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள், இருப்பினும் குளிர்காலம், கடினமான வானிலை மற்றும் இரவில் நடந்த நிலநடுக்கம் ஆகிய விடயங்களை, அவர்கள் பணியை மிகவும் கடினமாக்குகின்றன,” என்று அவர் கூறினார்.

சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தில் துருக்கிய எல்லைக்கு அருகில் உள்ள பெஸ்னியா கிராமத்தில் ஒரு மனிதன் பூகம்பம் பாதிக்கப்பட்டவனைக் கொண்டு செல்கிறான். Source: AP / Ghaith Alsayed/AP
ஏற்கனவே, 11 ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டுப் போரால் சிதைந்துள்ள சிரியாவில், 711 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில் 733 பேர் இறந்ததாக அவசரகால பணியாளர்கள் தெரிவித்தனர்.
இங்கு நடக்கும் மோதல் காரணமாக 4.1 மில்லியன் மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்றனர் என்றும், வடமேற்கு சிரியாவில் எல்லை தாண்டிய மனிதாபிமான உதவியை அவர்கள் நம்பியுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் கூறுகிறது. அவர்களுக்கே சர்வதேச ஆதரவு போதவில்லை என்று கூறி வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அழிவு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ஒரே சமயத்தில் பல அழிவுகள் – வாந்திபேதி (cholera) நோய், கடும் மழை மற்றும் பனி உள்ளிட்ட கடுமையான வானிலை - போன்ற பல காரணிகளால் சிரியா மக்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் Stephane Dujarric நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.
Aleppo நகரம் சிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கே, அருகருகே அமைந்திருந்த இரண்டு கட்டிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்து தெருக்களைத் தூசியால் நிரப்புவதை ஒருவர் ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.
சைப்ரஸ் மற்றும் லெபனான் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக, ஏற்கனவே போரில் பெருமளவில் சேதமடைந்த நகரில் வாழும் இரண்டு குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Hamaநகரில், ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து உயிரற்ற குழந்தை ஒன்று தூக்கிச் செல்லப்படுவதை Reuters நிருபர் பார்த்ததாக செய்தி பகிர்ந்துள்ளார்.

A White Helmets member carries a child rescued from the rubble following an earthquake in the town of Zardana in the northwestern Syrian Idlib province. Source: AFP, Getty / Abdulaziz Ketaz
'யாரும் வெளியே வரவில்லை '
Aleppo மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள Jandaris நகரில், பல மாடிக் கட்டிடம் இருந்த இடத்தில் கான்கிரீட், இரும்பு கம்பிகள் மற்றும் துணி மூட்டைகள் மட்டுமே மிஞ்சிக் கிடந்தன.
“அதற்குக் கீழே 12 குடும்பங்கள் அகப்பட்டுள்ளார்கள். ஒருவர் கூட வெளியே வரவில்லை. ஒருவரும் எஞ்சவில்லை,” என்று ஒரு மெல்லிய இளைஞன் கூறினான். காயப்பட்டுள்ள அவன் கைகளில் கட்டுப் போட்டிருக்கிறான். அதிர்ச்சியினால் அவன் கண்கள் விரிந்தபடி இருக்கின்றன.
வான்வழித் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றிவரும் Syrian White Helmets என்ற மீட்பு சேவைக் குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார் Raed al-Saleh. “இடிபாடுகளுக்கு அடியில் உள்ளவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, நேரத்துடன் போராடுகிறோம்” என்றார் அவர்.

The quake, which hit in the early darkness of a winter morning, was also felt in Cyprus and Lebanon. Source: Getty / Anadolu Agency/Anadolu Agency via Getty Images
குப்பை மேடாகக் குவிந்திருக்கும் கற்கள் நடுவே, பல மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதை, Diyarbakir என்ற துருக்கிய நகரில் கண்டதாக Reuters செய்தியாளார்கள் கூறினர். அவர்கள் தேடுதலில் கிடைத்த உடல் துண்டுகளை வெளியே இழுத்தனர். சில சமயங்களில் தங்கள் கைகளை உயர்த்தி மற்றவர்களை அமைதியாக இருக்குமாறு கோரி விட்டு, கீழே உயிரோடு யாராவது முனகும் சத்தம் கேட்கிறதா என்று கூர்ந்து கேட்டார்கள்.
இந்தப் பயங்கரமான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து “உயிர் இழப்பு மற்றும் பயங்கரமான பேரழிவுகள் குறித்து மிகவும் வருத்தமடைந்தோம்” என்று நாட்டு மக்கள் அனைவர் சார்பாகவும் பிரதமர் Anthony Albanese ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரழிவின் மீட்புப் பணிகளுக்காக ஆஸ்திரேலியா 10 மில்லியன் டொலர்களை வழங்கும் என பிரதமர் அறிவித்தார்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.