Highlights
- அகதிகளை காலவரையறையற்ற தடுப்புக்காவலில்வைக்க வழிசெய்யும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ளது.
- கடந்த மார்ச் மாத இறுதியில் முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- குறித்த சட்டத்தைப் பயன்படுத்தி மேலும் பல அகதிகளின் விசாக்களை ரத்துசெய்து அவர்களை காலவரையறையற்ற தடுப்புக்காவலில்வைக்க அரசு முற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்தின்கீழ் ஆஸ்திரேலிய குடியுரிமையில்லாத ஒருவரை அவரது நன்நடத்தையின் பிரகாரம் - அல்லது அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்று உறுதிசெய்யப்பட்டதின் பிரகாரம் - அல்லது குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் அமைப்புக்களோடு தொடர்புகளை கொண்டுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதன் பிரகாரம் - அவரது விசாவை ரத்துச்செய்துவிட்டு காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும்.
குறிப்பிட்ட நபரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பினால் அவருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கருதப்படும்பட்சத்தில் அந்த நபருக்கு எதிராக காலவரையறையற்ற தடுப்புக்காவல் என்ற சட்டத்தை அரசால் பயன்படுத்த முடியும்.
கடந்த மார்ச் மாத இறுதியில் முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லேபர் கட்சியினரின் ஆதரவுடன் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிரீன்ஸ் கட்சி இதற்கெதிராக வாக்களித்துள்ளது.
தற்போது குடிவரவு தடுப்புக்காவலில் உள்ள ஆஸ்திரேலிய குடியுரிமையில்லாத மற்றும் அவர்களது சொந்தநாட்டுக்கும் திருப்பியனுப்ப முடியாத நிலையில் உள்ளவர்களை மையப்படுத்தியே குறித்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தனது சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்பப்படமுடியாதவரை வலுக்கட்டாயமாக அனுப்புவதற்குப் பதிலாக, ஆஸ்திரேலியாவிலேயே காலவரையறையின்றி தடுத்துவைக்க முடியும்.
இந்நிலையில் குறித்த சட்டத்தை ஆஸ்திரேலிய தடுப்புமுகாம்களிலுள்ள அகதிகளுக்கும் அரசு பயன்படுத்தமுடியும் என பலதரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாரதூரமான குற்றச்செயல் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என ASIO-வினால் அடையாளப்படுத்தப்பட்டநிலையில் தடுப்புக்காவலில் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் குறித்த சட்டத்தைப் பயன்படுத்தி மேலும் பல அகதிகளின் விசாக்களை சிறிய விடயங்களுக்காக ரத்துசெய்து அவர்களை காலவரையறையற்ற தடுப்புக்காவலில்வைக்க அரசு முற்படக்கூடும் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.