வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால் நான்காவது அலை கிறிஸ்மஸுக்கு முன் உச்சத்தை அடையக்கூடும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.
கடந்த வாரத்தில் நியூ சவுத் வேல்ஸில் 40,194 மற்றும் விக்டோரியாவில் 27,790 என, தொற்றாளர்களின் எண்ணிக்கை முறையே ஆறு சதவீதம் மற்றும் மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போதைய கோவிட் பரவல் அடுத்த வாரம் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் பின் தொற்றுகள் குறையும் எனவும் NSW தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான சந்தேகத்திற்கிடமான கோவிட் தொற்றாளர்களுடன் பயணிகள் சொகுசுக் கப்பல் ஒன்று, வெள்ளிக்கிழமை காலை சிட்னியை வந்தடைந்தது.
Celebrity Eclipse என்ற இக்கப்பல் கிட்டத்தட்ட 3000 பயணிகளை ஏற்றிக்கொண்டு, நியூசிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு சிட்னியை வந்தடைந்துள்ளது.
இக்கப்பல் tier 2 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1000 நபர்களுக்கு 30-99 நேர்மறை தொற்றாளர்கள் உள்ளனர்.
COVID-19 outbreaks onboard cruise ships docked or arriving in Sydney. Credit: NSW Government
பல கோவிட் தொற்றாளர்களுடன் மேலும் இரண்டு கப்பல்கள் சிட்னிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரண்டு கப்பல்களிலும் கோவிட் பரவலின் அளவு குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 மற்றும் பிற சவால்களுக்கு மத்தியிலும் மாநிலத்தின் பொது மருத்துவமனைகளின் செயல்திறன் மேம்பட்டு வருவதாக NSW Health கூறியது.
65.6 சதவீத நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கியதாகவும், மேலும் 10 நோயாளிகளில் ஏழு பேர் (74.8 சதவீதம்) 30 நிமிட இலக்குக்குள் ஆம்புலன்சில் இருந்து அவசரசிகிச்சைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும்NSW Health குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் Anthony Albanese தனக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கடந்த திங்களன்று அறிவித்தார்.
பிரதமர் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு அக்டோபர் 14 அன்று முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
நான்காவது கோவிட் அலை மற்றும் நாட்டின் தயார்நிலை குறித்து தேசிய அமைச்சரவை இன்று விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Moderna நிறுவனம் தனது mRNA தடுப்பூசி தயாரிப்பு மையத்தை மெல்பனின் தென்கிழக்கில் கட்டத் தொடங்கியுள்ளது. இந்த மையத்தின் ஊடாக ஆண்டுக்கு 100 மில்லியன் தடுப்பூசிகள் வரை தயாரிக்க முடியும்.
சுகாதார அமைச்சர் Mark Butler கூறுகையில், புதிய மையம் மற்றும் mRNA தொழில்நுட்பம், ஆஸ்திரேலியாவில் தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் இருதயநோய், சுவாச நோய் போன்ற பிற நோய்களுக்கும் உதவும் என்றார்.
சீனா தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அதன் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் சிலவற்றை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. தனிமைப்படுத்தல் மையங்களில் இருப்பதை விட குடியிருப்பாளர்கள் இப்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படலாம்.
புதிய வாராந்திர உலகளாவிய இறப்புகளின் எண்ணிக்கை, முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் 17 சதவீதம் குறைந்துள்ளது என்று, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை 7,800 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான புதிய வாராந்திர தொற்றுகள் பதிவாகியுள்ளன.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.